திருவாரூரில் நில அதிர்வு? பொதுமக்கள் அச்சம்

திருவாரூர்: திருவாரூரில் நேற்று மதியம் திடீரென ஏற்பட்ட நிலஅதிர்வுக்கான அறிகுறியால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியதோடு அச்சத்தில் இருந்தனர். திருவாரூர் மாவட்டம் நகர் பகுதி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் 3 மணியளவில் நிலஅதிர்வுடன் பயங்கர சத்தம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டுக்குள் இருந்த மேஜைகள், நாற்காலிகள், பலரது வீடுகளில் இருந்த ஜன்னல் கதவுகள் ஆடியதோடு, கடையில் இருந்த பொருட்கள் அதிர்ந்துள்ளது.

சில வீடுகளில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தது. சுவற்றில் மாற்றியிருந்த டிவியும் கீழே விழுந்தது. பயங்கர சத்தம் காரணமாக ஏற்பட்ட அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் தங்கள் வீட்டைவிட்டும் வெளியேறினர். இந்த சத்தமானது பூமியின் அடியில் இருந்து கேட்டதால் பொதுமக்கள் மிகுந்த பீதிடைந்தனர். கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் இந்த பயங்கர சத்தம் கேட்டதால் அரசு அலுவலர்களும் வெளியே ஓடி வந்தனர்.

இந்த சத்தம் மன்னார்குடி பகுதியில் அதிக அளவில் கேட்டுள்ளது. இகுறித்து மாவட்ட கலெக்டர் மோகன சந்திரன் கூறுகையில், “இந்திய விமானப்படை வீரர்கள் இன்று (நேற்று) பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஜெட் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஜெட் விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கப்பட்டதால் 2 முறை பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே திருவாரூரில் நில அதிர்வு ஏதுவும் ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்” என்றார்.

The post திருவாரூரில் நில அதிர்வு? பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: