கிராமப்பகுதிக்குள் சுற்றித்திரியும் சிறுத்தை விரைந்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

கோவை, மார்ச் 23 : கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் மதுக்கரை அருகே உள்ள குமிட்டிபதி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கடித்து கொன்ற சிறுத்தை, உடலை தூக்கிச் சென்றது. இது கிராம மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘வனப்பகுதியில் இருந்து வெகு தொலைவில் உள்ள குமிட்டிபதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. கிராமப்பகுதிக்குள் குடியிருக்கும் காட்டுப்பன்றிகளை பிடிக்க இரவு நேரங்களில் சிறுத்தைகள் கிராமத்திற்குள் வருவதே இதற்கு காரணம். கிராமப்பகுதிக்குள் சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post கிராமப்பகுதிக்குள் சுற்றித்திரியும் சிறுத்தை விரைந்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: