சத்தியமங்கலம்,மார்ச்23: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி அங்கும் இங்கும் அலைவதோடு நீண்ட தொலைவுக்கு பயணிக்கின்றன. இதன் காரணமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே நேற்று மதியம் பண்ணாரி அம்மன் கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை பட்டப்பகலில் சாலையில் செல்லும் வாகனங்களை பற்றி கவலைப்படாமல் மெதுவாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றது. காட்டு யானை பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றதைக் கண்ட வாகன ஓட்டுனர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். பகல் நேரங்களில் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
The post பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற காட்டு யானை appeared first on Dinakaran.