கடலூரில் சிறுமிகளை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டாக தலைமறைவாக இருந்த தம்பதி கைது

கடலூர், மார்ச் 20: கடலூரில் சிறுமிகளை கடத்தி சென்று விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டாக தலைமறைவாக இருந்த தம்பதியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் கடந்த 2014ம் ஆண்டு திடீரென மாயமாகினர். இதையடுத்து திட்டக்குடி போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமிகளை அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமார்(39), இவரது மனைவி தமிழரசி(39) ஆகியோர் கடத்தி சென்று, திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புரோக்கர்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதன் பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மாணவிகள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். அப்போது மாணவிகள் 2 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் மாணவிகளிடம் விசாரித்த போது, மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதனர். இதையடுத்து சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அப்போது சிபிசிஐடி போலீசார் கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு சதீஷ்குமார், தமிழரசி ஆகியோர் தலைமறைவாகினர். சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 4.1.2019 அன்று இவ்வழக்கில் தொடர்புடைய 16 பேருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வழக்கில் தொடர்புடைய நம்மாழ்வார், செந்தில்குமார் ஆகியோர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜெபினா(40) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஜாமீனில் வெளிவந்து 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டிக்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழரசி திருவண்ணாமலையில் தங்கி வீட்டு வேலை செய்வது தெரிய வந்தது. அதன் பிறகு திருவண்ணாமலைக்கு சென்ற போலீசார் அங்கு தமிழரசியையும் நேற்று கைது செய்து, இருவரையும் கடலூர் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கடலூரில் சிறுமிகளை கடத்தி விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 7 ஆண்டாக தலைமறைவாக இருந்த தம்பதி கைது appeared first on Dinakaran.

Related Stories: