இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் புகார் அளித்து வந்தனர். தெருவில் சுற்றும் நாய்கள், மாடுகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் சாலையில் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல், நாய் வளர்ப்போருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. நாய்களுக்கு சங்கிலி, முகக் கவசம் அணிவித்து வெளியே அழைத்து செல்ல வேண்டும். உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ராட்வீலர், பிட்புல் டெரியர் உள்ளிட்ட 23 வகை நாய்களுக்கு உடனடி கருத்தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் நடவடிக்கை மூலம் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும், மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது வளர்ப்பு பிராணியான இந்த வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக இணைப்பு சங்கிலி மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவு நாயின் மூக்கு நுனியில் இருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை, தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவ்வப்போது நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்த விதிமுறைகளை கடுமையாக சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னையில் வளர்ப்பு நாய்களை பொதுவெளியில் அழைத்து வரும் போது நாய்களுக்கு வாய்மூடி அணிவித்து வர வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி அணியாமல் பொதுவெளியில் அழைத்து வரும் நபர்களுக்கு குறைந்தது ரூ.1,000 முதல் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சியின் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள், தெருநாய்களாலும் இதுபோன்ற பிரச்னை வருவதாகவும், எனவே அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.
* தடை செய்யப்பட்ட 23 வகை நாய்கள்
பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சவுத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக்.
The post பொது இடங்களுக்கு அழைத்து வரும்போது வளர்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்: அசம்பாவிதங்களை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.