அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண்

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ஜான் கிறிஸ்டோபர். கடந்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் ’எனது குழந்தை இந்தப் பள்ளியில் படிக்கிறது. எனது குழந்தையை பார்க்க வேண்டும்’ என தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

அப்போது, குழந்தையை யார் பார்க்க வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என குழந்தையின் தந்தை கூறியுள்ளார். அவரது அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என அந்த இளம் பெண்ணிடம் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து திடீரென அந்த பெண் தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர், அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில், இந்த இளம் பெண், கூலித் தொழிலாளியான தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டு குழந்தைகள் தந்தையுடனும் ஒரு குழந்தை தாயாருடன் வசித்து வருவது தெரியவந்தது. அந்தப் பெண்ணை போலீசார் தேடிவரும் நிலையில், அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தப் பெண், தலைமை ஆசிரியரை தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

 

The post அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம்பெண் appeared first on Dinakaran.

Related Stories: