வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மஞ்சளாற்றில் புதர்மண்டி காணப்படும் சீமை கருவேல மரங்கள், செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையிலிருந்து வத்தலக்குண்டு மஞ்சளாற்றுக்கு தண்ணீர் வருகிறது. புதுப்பட்டியில் இருந்து பெரியகுளம் சாலை, பிலிஸ்புரம், பெருமாள் கோயில், சங்கிலி கோயில், நடுத்தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளையொட்டி ஊர் நடுவே செல்கிறது இந்த மஞ்சளாறு. தற்போது இந்த மஞ்சளாற்றின் அனைத்து இடங்களிலும் சீமை கருவேல மரங்ககள், செடி- கொடிகள் புதர்மண்டி காணப்படுகிறது.
இதில் சீமை கருவேல மரங்கள் கோடை காலங்களில் ஆற்றில் செல்லும் குறைந்த அளவு தண்ணீரையும் உறிஞ்சி விடுகிறது. மேலும் செடி- கொடிகள் புதர்மண்டி இருப்பதால் பாம்பு, தேள், நட்டுவாக்காலி போன்ற விஷ ஜந்துகள் ஆற்றையொட்டியுள்ள வீடுகளில் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தினசரி அச்சத்துடன் இருக்க வேண்டியுள்ளது. எனவே பொதுப்பணி துறையினர் ஆற்றிலுள்ள முட்புதர்களை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆற்றோர குடியிருப்பு வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் சின்னா கூறியதாவது: வத்தலக்குண்டு மஞ்சளாற்றையொட்டி குடியிருந்து வரும் குடிசைவாசிகள் ஆற்றில் புதர்மண்டி இருப்பதால் விஷஜந்துகள் வீட்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் தினசரி நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் ஆற்றில் ஆக்கிரமித்துள்ள சீமைகருவேல மரங்களால் நீராதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுப்பணி துறையினர் மஞ்சளாற்றில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், செடி- கொடிகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
The post வத்தலக்குண்டுவில் சீமை கருவேலம் பிடியில் மஞ்சளாறு: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.