மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமமான உள்ளாரில் யானைகள் அட்டகாசம்: பல ஏக்கரில் கரும்புகள் சேதம் -விவசாயிகள் கவலை


சிவகிரி: தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிவகிரி, ராயகிரி, உள்ளார், ராசிங்கப்பேரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை, நெல், மா, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக விளைநிலங்களுக்குள் யானை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இந்த வனவிலங்குகளை ஒரு பகுதியில் வனத்துறையினர் விரட்டியடித்தால் வேறொரு பகுதி வழியாக விளைநிலத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக யானைகள் விளைநிலங்களுக்கு அருகே உள்ள குளத்து பகுதிகளில் உள்ள புதர்களில் பகல் நேரங்களில் மறைந்து நிற்கிறது. அவை இரவு நேரங்களில் விளைநிலங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

யானை உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்வேலியும் பயனளிக்கவில்லை. சூரியசக்தி மின்வேலியை சேதப்படுத்திவிட்டு யானை கூட்டம் எளிதாக விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகிறது. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உள்ளார், திருமலாபுரம், குலசேகரப்பேரி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு புகுந்த யானைகள் தோட்டத்தில் புகுந்து கரும்புகளை சேதப்படுத்தியது. இதனால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ராமநாதபுரத்தை சேர்ந்த விவசாயி முருகையா கூறுகையில், ‘மேற்கு மலைத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்களுக்குள் கடந்து சில மாதங்களாக யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து கரும்பு, தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்தி வருகின்றன. தற்போது சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை சேதப்படுத்தியுள்ளன. எனவே, வனத்துறையினர் யானைகளை வனத்தின் உள்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

The post மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமமான உள்ளாரில் யானைகள் அட்டகாசம்: பல ஏக்கரில் கரும்புகள் சேதம் -விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: