தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-மதுரை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு.! பயணிகள் அதிர்ச்சி

அவனியாபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-மதுரை விமான கட்டணம் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் பணிபுரியும் தென்மாவட்ட மக்கள் பஸ், ரயில், விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இந்நிலையில், சென்னை-மதுரை இடையே விமானக் கட்டணம் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் சாதாரன நாட்களில் ரூ.4,500 விமான கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், தீபாவளியையொட்டி அக்.29, 30ம் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) சுமார் 3 மடங்கு வரை உயர்த்தப்பட்டு, ரூ.12,000 வரை உயர்ந்துள்ளது.

இன்று சென்னை-மதுரைக்கு விமானக் கட்டணமாக ரூ.9,000 வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தீபாவளி முடித்து சென்னை திரும்ப வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.3) விமானக் கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து விமான பயணிகள் கூறியதாவது: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்படுவதை தமிழக அரசு கண்காணித்து தடுக்கிறது. இதேபோல, பண்டிகை காலங்களில் விமானக் கட்டணம் பல மடங்கு வரை உயர்த்தப்படுவதை தடுக்க ஒன்றிய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை-மதுரை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு.! பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: