எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமே அதை நிச்சயம் செய்து முடிப்போம்; அதுவரை நெருப்பாக இருப்போம்: மாநாட்டில் விஜய் பேச்சு!

விழுப்புரம்: எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமே அதை நிச்சயம் செய்து முடிப்போம்; அதுவரை நெருப்பாக இருப்போம் என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் உரையாற்றினார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் உரையாற்றியதாவது; கொள்கைகள் அடிப்படையில் செயல்படுவதில் த.வெ.க. தொண்டர்கள் உறுதியாக இருக்க வேண்டும். எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமே அதை நிச்சயம் செய்து முடிப்போம்; அதுவரை நெருப்பாக இருப்போம். மக்களுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் நடைமுறை சாத்தியமாக இருக்க வேண்டும். சமதர்ம சமத்துவ கொள்கையை மாநாட்டில் அறிவித்துள்ளதால் கதறல் சத்தம் அதிகரித்துள்ளது. பிளவுவாத சக்திகள் மதம் பிடித்த யானை போன்றது. ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்ற அண்ணாவின் கொள்கையை ஏற்கிறோம். ஆடியோ லாஞ்ச் மேடையில் இருந்து, அதிரடி சேஞ்ச் மேடைக்கு மாறியுள்ளேன். அரசியலில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை; அரசியலில் ஒவ்வொரு அடியையும் கண்ணியத்துடன் எடுத்து வைப்பேன்.

த.வெ.க. தலைவர் விஜய் மாற்று சக்தி, மாற்று அரசியல் என்பதில் எல்லாம் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த கலர பூசுறது, அந்த கலர பூசுறதுனு என்ன தான் மோடி மஸ்தான் வேலைய செஞ்சாலும் ஒன்னும் நடக்க போறது இல்ல. பாஜக என்பது நமது சித்தாந்த எதிரி. இங்கு ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் ஒரு குறிப்பிட்ட சாயத்தை பூசுவதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கப்போவது பெண்களே. பெண் குழந்தைகளின் கல்விக்கு நிரந்தர பாதுகாப்பு தர வேண்டும் என்பதில் உறுதி. குட்டீஸ் முதல் பாட்டிகள் வரை அனைவருக்குமானவனாக இருப்பேன். நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் கூத்தாடிகள் என விமர்சிப்பது எம்ஜிஆர், என்டிஆர் காலம் முதலே உள்ளது. அந்த கூத்தாடிகள்தான் 2 மாநிலங்களிலும் மறைந்த பிறகும் மக்கள் மனதில் வாழ்கின்றனர். கூத்தாடி என்பது கேவலமான வார்த்தை அல்ல. ஆரம்பத்தில் சினிமாவுக்கு வந்தபோதும் முகம் சரியில்லை; முடி சரியில்லை என கூறினார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் உழைத்து முன்னேறியவன் நான்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும், சுற்றி சுற்றி, உழைத்து முன்னேறியவன்தான் நான். என்னை நடிகனாகவும், பொறுப்புள்ள மனிதனாகவும், அரசியல் கட்சி தொண்டனாகவும் மாற்றியது மக்கள்தான். என்னிடம் இருப்பது நேர்மையும் உழைப்பும்தான். நடிப்புத் துறையில் உச்சத்தில் இருக்கும்போது நடிப்பை விட்டுவிட்டு அதற்கான ஊதியத்தை விட்டுவிட்டு மக்களை நம்பி வந்துள்ளேன். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தனித்துறை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தவெகவை தனிப்பெரும்பான்மையுடன் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும், நம்பி கூட்டணிக்கு வருவோருக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு தரப்படும். நம்பி வருபவர்களை அரவணைத்துத் தான் பழக்கம். அரசியலை கண்டு பயமில்லை. முதன்முதலில் அம்மா என்று அழைக்கும் குழந்தை முன்பு பாம்பு வந்து நின்றால் எப்படி இருக்குமோ அதுதான் அரசியல்.

அம்மா என்ற அழைக்கும் குழந்தை எப்படி அச்சமின்றி பாம்பை பிடித்து விளையாடுமோ, அதுபோல் தான் அரசியலில் செயல்பட முடியும். பாம்பாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் பயப்பட மாட்டோம். அரசியல் ஒரு போர்க்களம்; கவனமாக கையாள வேண்டும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என அடிப்படை கொள்கையை அறிவித்துவிட்டு கட்சி நிர்வாகிகளை பிரித்துப் பார்ப்பது தேவையற்றது. அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா? அரசியலும் மாற வேண்டும். மணிக்கணக்கில் பேச உடன்பாடு இல்லை. தற்போதைய தேவை என்ன என்று மக்களிடம் எடுத்துக் கூறினால்போதும் அப்போதுதான் நம்பிக்கை வரும். தற்போதைய பிரச்சனை, தீர்வு என்ன என்பதை பற்றி மட்டுமே சிந்திக்கப் போகிறோம் என்று விஜய் உரையை முடித்துக்கொண்டார்.

 

The post எதற்காக அரசியலுக்கு வந்துள்ளோமே அதை நிச்சயம் செய்து முடிப்போம்; அதுவரை நெருப்பாக இருப்போம்: மாநாட்டில் விஜய் பேச்சு! appeared first on Dinakaran.

Related Stories: