×
Saravana Stores

கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி மார்ச் வரை நீட்டிப்பு

சிவகங்கை: கீழடி பத்தாம் கட்ட அகழாய்வு பணி அடுத்தாண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18ம் தேதி தொடங்கியது. பொதுவாக அகழாய்வு பணி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் துவங்கி செப்டம்பரில் முடிக்கப்படும். ஆனால், தமிழக தொல்லியல் துறை ஜனவரியில் துவங்க வேண்டிய ஆய்வை தாமதமாக ஜூன் மாதம் தொடக்கியது.

ஆணையர் சிவானந்தம் மேற்பார்வையில் கீழடி அகழாய்வு தள இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் மற்றும் தொல்லியல் மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவஹர், கார்த்திக், பிரபாகரன் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு பாசி மற்றும் கண்ணாடி மணிகள், ‘தா’ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு பானை ஓடுகள் கண்டறியபட்டுள்ளன. அகழாய்வில் ஒவ்வொரு நாளும் அரிய தொல் பொருட்கள் கிடைத்து வருகின்றன.

இதுவரை தோண்டப்பட்ட 8 குழிகளில் 5 பெரிய பானை, 20க்கும் மேற்பட்ட சிறிய பானை என மொத்தம் 100க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், செப்டம்பரில் நிறுத்தப்பட வேண்டிய அகழாய்வு பணி 2025 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், 11ம் கட்ட அகழாய்வு பணி மே 2025ல் தொடங்கும் என்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post கீழடி 10ம் கட்ட அகழாய்வு பணி மார்ச் வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Archaeological Department ,Kladadi ,Tirupuwanam ,Sivaganga District ,Dinakaran ,
× RELATED அரசியலை கண்டு எனக்கு பயமில்லை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உரை