நாடாளுமன்ற தேர்தலின் போது கடந்த மார்ச் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்குமூலம் அளித்தனர்.
இதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் மேலாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், பாஜ தொழிற்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் மகன்கள் பாலாஜி, கிஷோர் மற்றும் பாஜ மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜ மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட 15 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இந்த வழக்கில் திடீர் திருப்பதாக ஈரோடு பகுதியை சேர்ந்த ரயில்வே கேன்டீன் உரிமையாளர் முஸ்தபா ரூ.4 கோடி பணம் தன்னுடையது என்று உரிமை கோரினார். ஆனால் விசாரணையில் பணம் அவருடையது இல்லை என உறுதியானது. அதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் கேன்டீன் உரிமையாளர் அளித்த வாக்குமூலத்தின்படி 2வது முறையாக பாஜ மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் கடந்த 7ம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தி சில தகவல்களை பெற்றனர்.
பிறகு விசாரணையின் போது கிடைத்த பல்வேறு ஆதாரங்களின்படி புதுச்சேரி மாநில தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி மற்றும் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லால்வானி மற்றும் என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த சூரஜ் ஆகியோர் நேற்று நேரில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அந்த சம்மனை தொடர்ந்து நேற்று காலை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் செல்வகணபதி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது வழக்கறிஞர் மூலம் தனக்கு காலில் அடிபட்டுள்ளது என்றும், பல்வேறு கட்சி பணிகள் இருப்பதால் 3 மாதங்களுக்கு நேரில் ஆஜராக அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகளிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 3 மாதம் அவகாசம் அளிப்பது குறித்து சிபிசிஐடி போலீசார் சட்ட நிபுணர்களிடம் விசாரணை நடத்திதான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், திட்டமிட்டபடி சவுகார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் லால்வானி மற்றும் என்எஸ்சி போஸ் சாலையை சேர்ந்த சூரஜ் ஆகியோர் நேற்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் ரூ.4 கோடி பணம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின்படி மாலை வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர். இந்த வழக்கில் புதுச்சேரி மாநில பாஜ தலைவர் திட்டமிட்டு வழக்கை இழுத்து அடிக்கும் நோக்கிலும், வழக்கை திசை திருப்பும் வகையிலும் 3 மாதம் அவகாசம் கேட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
The post ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜ தலைவர் ஆஜராக 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம்: வழக்கறிஞர் மூலம் சிபிசிஐடி அதிகாரிகளிடம் கொடுத்தார் appeared first on Dinakaran.