வழக்கு தொடர பாபு முருகவேலுக்கு கட்சி அனுமதி தரவில்லை சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சபாநாயகர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இது, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் 40 எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக கூறியது தகவல் தானே தவிர அவதூறு அல்ல என்று வாதிட்டார்.

புகார்தாரர் பாபுமுருகவேல் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், சபாநாயகரின் பேச்சு தொடர்பாக கட்சி சார்பில் எந்த புகாரும் தாக்கல் செய்யப்படவில்லை. வழக்கை தொடர அதிமுக கட்சி இவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கவில்லை. அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் அமைச்சர் பதவிக்காக அப்பாவு இதுபோன்று பேசியிருக்கிறார் என்று கூறியிருக்கிறாரே தவிர கட்சிக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தெரிவிக்கவில்லை. ஜெயக்குமாரும் எந்த அவதூறு வழக்கையும் தொடரவில்லை.

கட்சியின் வழக்குகள் தொடர்பான விஷயங்களில் ஆஜராக வேண்டும் என்று கட்சி பாபு முருகவேலை அறிவித்துள்ளது. அதில் குழுவில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் போன்றோர் இப்போது கட்சியிலேயே இல்லை. தளவாய் சுந்தரம்கூட தற்போது கட்சியில் இல்லை. எனவே, சபாநாயகர் மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும், உரிமையும் இல்லை. எனவே, சபாநாயகர் அப்பாவு மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

The post வழக்கு தொடர பாபு முருகவேலுக்கு கட்சி அனுமதி தரவில்லை சபாநாயகர் அப்பாவு மீதான அவதூறு வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: