அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ முன்னேற்பாடு தயாராக இருக்க வேண்டும்: தீபாவளியை முன்னிட்டு பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  தீபாவளி பாதுகாப்பாக கொண்டாடுவது மிகவும் முக்கியமானது. எனவே பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக பட்டாசு திறந்தவெளியில் வெடிக்க வேண்டும், இறுக்கமான உடை, காலணி அணிய வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்தில் தண்ணீரை அருகில் வைத்திருக்க வேண்டும், பட்டாசு வெடித்த பிறகு முறையாக கை, கால்களை கழுவ வேண்டும். முக்கியமாக சுவாசப் பிரச்னை இருப்பவர்கள் வீட்டுக்குள் இருப்பது மிகவும் அவசியமானது. மேலும் பட்டாசுகளை மின்கம்பம், சானிடைசர், வண்டிகள் அருகில் வெடிக்க கூடாது.

பட்டாசுகளை கையில் இருந்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இதை தவிர்த்து அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் பட்டாசுகள் எவ்வாறு வெடிக்க வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அத்துடன் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தீக்காயத்திற்கு கொடுக்கப்படும் மருந்து போதுமான அளவு வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ முன்னேற்பாடு தயாராக இருக்க வேண்டும்: தீபாவளியை முன்னிட்டு பொது சுகாதாரத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: