சிகிச்சைக்கு வந்த இளம்பெண் பலாத்காரம்: பிசியோதெரபிஸ்ட் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட் கைது செய்யப்பட்டார்.கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பீச் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வந்தவர் மகேந்திரன் (24).

கடந்த ஜூலை மாதம் இந்த மருத்துவமனைக்கு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிசியோதெரபி செய்வதற்காக வந்துள்ளார். வழக்கமாக இளம்பெண்ணுக்கு வேறு ஒரு ஊழியர் தான் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பார். ஆனால் சம்பவத்தன்று அந்த ஊழியருக்கு அவசர வேலை இருந்ததால் இளம்பெண்ணுக்கு மகேந்திரன் சிகிச்சை அளித்தார். அப்போது இளம்பெண்ணை மகேந்திரன் மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் கோழிக்கோடு வெள்ளயில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து அறிந்த மகேந்திரன் தலைமறைவானார். இதையடுத்து மகேந்திரன் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் முன்ஜாமீன் கோரி கோழிக்கோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது. தொடர்ந்து மகேந்திரன் நேற்று கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

 

The post சிகிச்சைக்கு வந்த இளம்பெண் பலாத்காரம்: பிசியோதெரபிஸ்ட் கைது appeared first on Dinakaran.

Related Stories: