இந்து மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைபோல கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியம் அமைக்கலாமா? ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியம் அமைப்பது குறித்து அரசுகள் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஒரு தனியார் கிறிஸ்தவ கல்லூரியில் தாளாளர் நியமனம் தொடர்பான நீதிமன்ற உத்தரவை, முறையாக அமல்படுத்தாதது குறித்து சில மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

ஒருவரை கல்லூரியின் தாளாளராக நியமிக்க முடிவானபோது, அவருக்கு எதிராக பேராசிரியர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். இதனால், தாளாளர் நியமனத்திற்கு சிஎஸ்ஐ பிஷப் தடை விதித்துள்ளார். ஆனால், சம்பந்தப்பட்டவரோ, தன் மீதான புகார் நிரூபிக்கப்படவில்லை. பிஷப் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளார் என கூறுகிறார். கிறிஸ்தவ அமைப்பின் மூலம் கல்வி, மருத்துவமனை போன்ற பல பொதுப்பணிகள் செய்யப்படுவதை மறந்துவிட முடியாது.

இந்நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் அறக்கட்டளைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை. எனவே, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் செயலர் மற்றும் தமிழ்நாடு அரசின் முதன்மை செயலரை இந்நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது.

கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, இருவர் தரப்பிலும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை நவ. 18க்கு தள்ளி வைத்தார்.

The post இந்து மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைபோல கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியம் அமைக்கலாமா? ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: