முத்தையாபுரம் பாதயாத்திரை பக்தர்கள் ஓய்விட பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி, அக்.25:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய தார்சாலை, பேவர் பிளாக் சாலை, மழைநீர், கழிவுநீர் வடிகால், உயர்கோபுர மின்விளக்கு, புதிய பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில், திருச்செந்தூர் முருகபெருமானை நடைபயணமாக சென்று வழிபட மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். அவர்கள் தங்கி ஓய்வெடுத்து செல்வதற்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் திருச்செந்தூர் சாலையில், முத்தையாபுரம் ரவுண்டானா உப்பாற்று ஓடை அருகில் பாதயாத்திரை பக்தர்கள் ஓய்விட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 1.6 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கு வசதியாக சுற்றிலும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளது.

அதேபோல் குடிநீர் மற்றும் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்கா பணிகள் நிறைவு பெற்று திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பூங்காவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல், முத்தையாபுரம் பல்க் பகுதியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தப் பகுதியில் ஹைமாஸ் மின் விளக்கு மற்றும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். ஆய்வின்போது, மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், விஜயகுமார், முத்துவேல், போல்பேட்டை திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post முத்தையாபுரம் பாதயாத்திரை பக்தர்கள் ஓய்விட பூங்காவில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: