நித்திரவிளை அருகே டாரஸ் லாரி சொகுசு கார் மோதல்

நித்திரவிளை, அக்.25: நித்திரவிளை அருகே மேற்கு கடற்கரை சாலையில் காஞ்சாம்புறம் சோமாசிமங்கலம் பகுதியில் சொகுசு காரில் டாரஸ் டிப்பர் லாரி மோதியதில் காரின் பின்னால் வந்த வங்கி ஊழியர் படுகாமடைந்தார். உதச்சிகோட்டை பகுதியை சார்ந்தவர் கிரீஸ்குமார். இவர் மேற்கு கடற்கரை சாலையில் சொகுசு காரில் நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார், காஞ்சாம்புறம் சோமாசிமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டாரஸ் டிப்பர் லாரி சொகுசு கார் மீது மோதியது. இதில் சொகுசு கார் பின்னோக்கி தூக்கி வீசப்பட்டது. அப்போது சொகுசு காரின் பின்னால் நெய்யூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (44), என்பவர் வந்த பைக்கின் மீது கார் மோதியது.

இதில் இடுப்பு பகுதியில் பலத்த காயமடைந்த ஜெகதீசனை, பொதுமக்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று விட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெகதீசன் நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்து வருகிறார். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற நித்திரவிளை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நித்திரவிளை அருகே டாரஸ் லாரி சொகுசு கார் மோதல் appeared first on Dinakaran.

Related Stories: