உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமனம்: நவ.11ல் பதவி ஏற்கிறார்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவிற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர் நவ.11ல் பதவி ஏற்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான ஓய்வு வயது 65 ஆகும். அதன்படி, தலைமை நீதிபதி சந்திரசூட் வரும் நவம்பர் 10ம்தேதி ஓய்வு பெறுகிறார். இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்ததலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு ஒன்றிய சட்ட அமைச்சகம் அவருக்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது.

இதையடுத்து உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பெயரை சந்திரசூட் பரிந்துரை செய்தார். இந்த சூழலில் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவின் பெயருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதை ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் தெரிவித்துள்ளார். இதனால் தலைமை நீதிபதி சந்திரசூட் ஓய்வுபெற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா வரும் நவ.11ல் பொறுப்பேற்பார்.

அவர் 2025 மே 13 வரை 6 மாதத்துக்கு தலைமை நீதிபதியாக செயல்படுவார். சஞ்சீவ் கண்ணா கடந்த 1960ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். 1980ம் ஆண்டு டெல்லி ஸ்டீபன் கல்லூரியில் சட்டம் பயின்றார். 2016ம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019ம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். வரும் நவ.11ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவி ஏற்க உள்ளார்.

The post உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா நியமனம்: நவ.11ல் பதவி ஏற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: