தமிழகத்தில் மழை நீடிக்கும், டானா புயல் வலுப்பெற்றது: இன்று இரவு கரையை கடக்கும்

சென்னை: வங்கக் கடலில் உருவான டானா புயல் நேற்று மேலும் வலுவடைந்துள்ள நிலையில் இன்று தீவிரப் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை ெகாண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலையில் புயலாக (டானா) மாறியது. அத்துடன் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் வட மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றது.

இதையடுத்து, வடக்கு ஒரிசா- மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை கரையைக் கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கிமீ வேகம் முதல் 110 கிமீ வேகத்திலும் இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசும். இதுதவிர தென் பகுதியில் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதே நிலை 27ம் தேதி வரை நீடிக்கும். மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 23ம் தேதிமுதல் 24ம் தேதி காலை மணிக்கு 90 கிமீ வேகத்திலும் இடையிடையே 100 கிமீ வேகத்திலும் காற்று வீசும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையும். மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று பிற்பகல் வரையில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post தமிழகத்தில் மழை நீடிக்கும், டானா புயல் வலுப்பெற்றது: இன்று இரவு கரையை கடக்கும் appeared first on Dinakaran.

Related Stories: