வங்கக்கடலில் உருவான டாணா புயல்.. அக்.25ம் தேதி ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிப்பு!!

டெல்லி: வங்கக்கடலில் டாணா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் நேற்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுது. அது மேலும் வலுப்பெற்று அதே பகுதியில் ஒடிசாவின் பாரதீப் பகுதியில் இருந்து தென்கிழக்கே சுமார் 700 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு தெற்கு-தென்கிழக்கே 750 கி.மீ தொலைவிலும், வங்க தேசத்தின் கெபுபராவுக்கு தெற்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும் நேற்று ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது.

இந்த நிலையில் இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக மாறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு கத்தார் நாட்டின் பரிந்துரையின்படி டாணா என பெயரிடப்பட்டுள்ளது. நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது டாணா. டாணா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும். 25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரிக்கும், சாகர் தீவுகளுக்கும் இடையே டாணா தீவிர புயலாக கரையை கடக்கக் கூடும்.

புயல் கடக்கும் சமயத்தில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டாணா புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுகளிலிருந்து 630 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் கொண்டுள்ளது. கேபுபாராவுக்கு 630 கி.மீ. தூரத்திலும், ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 580 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வங்கக்கடலில் உருவான டாணா புயல்.. அக்.25ம் தேதி ஒடிசாவின் பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: