தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து

மதுரை: கர்நாடகா மாநிலம், பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தைச் சேர்ந்த பெண் சீடர் சுரேகா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை, நித்யானந்தா கூறி, அபகரிக்க முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் என் மீதும், தர்மலிங்கம், ரதி ஆகியோர் மீதும் சேத்தூர் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். ஆனால், நாங்கள் எந்தவித நில அபகரிப்பு முயற்சியிலும் ஈடுபடவில்லை.

எங்கள் மீது பொய்யான புகாரின்பேரில் வழக்குப்பதிந்துள்ளனர். எனவே, எனக்கு இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நிலத்தின் உரிமையாளர் கணேசன் தரப்பில் முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘நித்யானந்தா எங்கு உள்ளார் என யாருக்கும் தெரியாது. கைலாசா என கூறிக்கொள்ளும் ஒரு பகுதியில் தலைமறைவாய் இருந்து வருகிறார்.

தலைமறைவாக இருந்து கொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார். நித்தியானந்தா மீது பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் நிலுவையில் உள்ளது. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு ஆஜராக வருவதில்லை. மதிப்பதும் இல்லை. ஆனால், அவரது சொத்துக்களை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? இந்த இடத்தை அபகரிக்கும் விவகாரத்தில் இனி தலையிட மாட்டேன்’ உத்திரவாத பத்திரம் தாக்கல் செய்தால், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றார்.

The post தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்யானந்தா: ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: