மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை அதிமுகவின் மதிப்புதான் சரிந்துவிட்டது: எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி

நாமக்கல்: மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவின் மதிப்புதான் சரிந்துவிட்டது என்று எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்து உள்ளார். நாமக்கல் அருகே பொம்மகுட்டைமேட்டில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களும் பாராட்டுகின்ற அரசாக இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற செல்வாக்கை விட, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது. நன்றாக கவனியுங்கள்.

இதை எதற்காக சொல்ல வருகிறேன் என்றால், இதை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? “தி.மு.க.வுக்கு மதிப்பு சரிந்துவிட்டது” என்று பேசி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் (எடப்பாடி பழனிசாமி) இந்த உலகத்தில்தான் இருக்கிறாரா? இல்லை, கனவுலகத்தில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, தினமும் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்கின்ற லட்சக்கணக்கான மகளிரின் முகங்களில் தி.மு.கவின் மதிப்பைப் பாருங்கள்.

அப்போது தெரியும் உங்களுக்கு. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை பெறும் ஒரு கோடிக்கும் அதிகமான என்னுடைய சகோதரிகளிடம் கேளுங்கள், தி.மு.கவின் மதிப்பு உங்களுக்குத் தெரியும். 20லட்சம் குழந்தைகள் தினமும் காலையில் வயிறு நிறைய சாப்பிடுகிறார்களே, அதில் இருக்கிறது தி.மு.கவின் மதிப்பு. லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் ‘புதுமைப்பெண்’ திட்டத்திலேயும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்திலேயும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்களே, அவர்களுக்குத் தெரியும் தி.மு.க. ஆட்சியின் நன்மதிப்பு.

“நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திறன்மிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய வெற்றியில் தி.மு.க. ஆட்சியின் மதிப்பு இருக்கிறது. இந்த நிலையில்தான் தி.மு.க.வின் மதிப்பு சரிந்துவிட்டது என்று அவர் சொல்வதை மக்கள் காமெடியாக பார்க்கிறார்கள். நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. அதற்கெல்லாம் நேரத்தை செலவிட நான் தயாராக இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த, நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றத் தேர்தல், இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல் என்று அனைத்திலும் மக்களுடைய பேராதரவுடன் நாங்கள் வென்றிருக்கிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் அவர்களே, தி.மு.க-வின் மதிப்பு சரியவில்லை. உங்கள் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டின் மதிப்பை அடமானம் வைத்தீர்கள். உங்களுடைய பதவியை காப்பாற்றுவதில் மட்டுமே குறியாக இருந்த காரணத்தினால், உங்களுடைய மதிப்பு மட்டுமல்ல, உங்கள் கட்சியின் மதிப்பும் மக்களிடம் சரிந்துவிட்டது. அதை முதலில் நீங்கள் உணருங்கள். மேற்கு மண்டலத்தின் நிலை என்ன இன்றைக்கு? மேற்கு மண்டலத்தை எங்களுடைய செல்வாக்கான பகுதி என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பீர்களே.

இப்போது என்ன ஆனது? கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதையும் பொய்யாக்கிவிட்டதா? இல்லையா? எங்களைப் பொறுத்தவரை மக்களைப் பற்றித் தான், மக்களால் ஒதுக்கப்பட்ட ஓரங்கட்டப்பட்டவர்கள் குறித்து, உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்களோடு மக்களாக இருந்து, மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் தொடர்ந்து வெற்றி பெறுகிறோம்.

மக்களான உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நான் சொல்கிறேன். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர வைப்போம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதல் மாநிலமாக உயர்த்துவோம், உயர்த்துவோம் என்று கூறி, விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post மக்களால் ஒதுக்கப்பட்ட உங்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை அதிமுகவின் மதிப்புதான் சரிந்துவிட்டது: எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி appeared first on Dinakaran.

Related Stories: