×
Saravana Stores

தொழிலாளர் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தகவல்

சென்னை: தொழிலாளர் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை தொடங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தை சேர்ந்த எல்லன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நிறுவனத்தின் பெயரை தொழிற்சங்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று சாம்சங் நிறுவனத்தின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் தங்கள் தொழிற்சங்கத்தை அரசு பதிவு செய்யவில்லை. எனவே, தங்கள் விண்ணப்பத்தை பரிசீலித்து தொழிற்சங்கத்தை பதிவு செய்து சான்று வழங்கும்படி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது; சாம்சங் நிறுவனம் சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்; தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்றும், நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது அடிப்படை உரிமை அல்ல என்றும் தெரிவித்தார். தொழிலாளர் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிறுவன பெயரை பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்ற சாம்சங் கோரிக்கை மனுவை ஐகோர்ட் ஏற்றது.

தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழிற்சங்கு சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை. கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்டு நீதிபதி சாம்சங் நிறுவன இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post தொழிலாளர் போராட்டத்தால் ரூ.840 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் சாம்சங் நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Samsung ,iCourt ,Chennai ,Samsung India Workers Association ,CID ,Sriprahumutur ,Dinakaran ,
× RELATED சாம்சங் இந்தியா தொழிலாளர்களின்...