மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். வீரக்கல் கிராமம் கொத்திக் குட்டை ஏரியில் ஞாயிற்றுக்கிழமை துணி துவைக்கச் சென்றபோது சிவநந்தினி, சிறுவன் சிவகிரி, திவ்யதர்ஷினி ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த (20.10.2024) அன்று நண்பகல் 12.00 மணியளவில் வீரக்கல் கிராமம், வீரக்கல் புது காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் சிவநந்தினி (வயது 20), மகன் சிவகிரி (வயது 10) மற்றும் முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (வயது 14) ஆகிய மூவரும் துணிதுவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: