×
Saravana Stores

நவம்பர் 1 முதல் 19ம் தேதிக்குள் தாக்குதல் நடக்கும் ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பயணிக்க வேண்டாம்: வெடிகுண்டு புரளிகளுக்கு மத்தியில் காலிஸ்தான் தலைவர் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட இருப்பதால், அதில் யாரும் பயணிக்க வேண்டாம்’ என காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 100 விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்திருப்பதால் பயணிகள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்த மிரட்டல்கள் அனைத்தும் வெறும் புரளிகள் என்றாலும், பாதுகாப்பை உறுதிப்படுத்த சோதனைகள் நடத்தப்படுவதால் விமான புறப்பாட்டில் தாமதம் ஏற்படுவதோடு, பொருளாதார ரீதியாகவும் இந்திய விமான நிறுவனங்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றன.

இந்த வெடிகுண்டு மிரட்டல்களுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், இரட்டை குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வரும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூன் சமூக ஊடகங்களில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதிக்குள் ஏர் இந்தியாவின் எந்த விமானத்திலும் யாரும் பயணிக்க வேண்டாம் என்றும் அந்த சமயத்தில் ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 40 ஆண்டு நினைவையொட்டி, ஏர் இந்தியா விமானங்கள் தகர்க்கப்பட இருப்பதாக அவர் பீதியை கிளப்பி உள்ளார். வெடிகுண்டு புரளிகளுக்கு மத்தியில் பன்னூனின் இந்த மிரட்டல் விமான பயணிகளிடம் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.

ஆனால், பன்னூன் கடந்த ஆண்டும் இதே காலகட்டத்தில் இதே போன்ற வீடியோ மிரட்டல் விடுத்துள்ளார். அதில் நவம்பர் 19ம் தேதி ஏர் இந்தியா விமானம் மீது தாக்குதல் நடத்தப்படும் என கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு டிசம்பரில் அமெரிக்காவில் அவரைக் கொல்ல சதி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 13 அல்லது அதற்கு முன் இந்திய நாடாளுமன்ற கட்டிடம் தகர்க்கப்படும் என மிரட்டினார். இதுவரை பன்னூன் விடுத்த அனைத்து மிரட்டல்களும் வெறும் புரளியே என்பதால், ஏர் இந்தியா குறித்த அவரது மிரட்டலை எண்ணி பயணிகள் அச்சப்பட வேண்டாம் என இந்திய அதிகாரிகள் கூறி உள்ளனர். பன்னூனின் வீடியோவைத் தொடர்ந்து இதுவரை இந்திய விமானங்களுக்கு வந்த மிரட்டல்களில் காலிஸ்தான் கைவரிசை இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

The post நவம்பர் 1 முதல் 19ம் தேதிக்குள் தாக்குதல் நடக்கும் ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பயணிக்க வேண்டாம்: வெடிகுண்டு புரளிகளுக்கு மத்தியில் காலிஸ்தான் தலைவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED கூகுள் தலைமை தொழில்நுட்ப நிபுணராக...