முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: சாதனை மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்

திருச்சி, அக்.21: திருச்சி, அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 2024-25ம் ஆண்டின் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை, கைப்பந்து மற்றும் கேரம் போட்டிகள் கடந்த அக்.6ம் தேதி துவங்கி வரும் அக்.23ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி, பொதுபிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவினர்களக்கு தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து, கோ-கோ, சிறப்பு கையுந்துபந்து, வீல்சேர் டேபிள் டென்னிஸ் மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் கடந்த மாதம் செப்.10ம் தேதி முதல் செப்.24ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் மற்றும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் 38 மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அக்.18ம் தேதி முதல் அக்20ம் தேதி வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கேரம் விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் ஒற்றையர் பிரிவு, மாணவிகள் ஒற்றையர் பிரிவு மற்றும் மாணவர்கள் இரட்டையர் பிரிவு, மாணவிகள் இரட்டையர் பிரிவு ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேற்று பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், முசிறி எம்எல்ஏ தியாகராஜன், மண்டல தலைவர் மதிவாணன், மண்டல முதுநிலை மேலார் (விளையாட்டுத்துறை) செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கண்ணன், கவுன்சிலர்கள், விளையாட்டுத்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி: சாதனை மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் appeared first on Dinakaran.

Related Stories: