வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது டானா புயல்: வட தமிழகத்தில் மழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் நாளை மறுநாள் புயல் உருவாகும். அதன் காரணமாக வட தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருமவழை பெய்யத் தொடங்கியுள்ளதை அடுத்து, கடந்த வாரம் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. அதற்கு காரணமாக இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசையில் நகர்ந்து கரையைக் கடந்ததால், மழை பெய்வதும் குறையத் தொடங்கியது.

இந்நிலையில், வங்கக் கடலில் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக வட தமிழகத்தில் அனேக இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது. அதன் பின் அது மேலும் வலுப்பெற்று 23ம் தேதி புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறும் போது ஏ ற்கனவே புயல் பட்டியலில் உள்ள பெயர்களின் வரிசைப் படி ‘டானா’ என்று பெயரிடப்படும்.

இந்த டானா புயல் வடக்கு மற்றும் வட கிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் அல்லது மியான்மர் பகுதிக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.  இந்த நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ராணிவ்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதே நிலை 23ம் தேதி வரை நீடிக்கும். வங்கக் கடலில் புயல் உருவாகும் சூழ்நிலையை அடுத்து, அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 75 கிமீ வேகத்தில வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

The post வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது டானா புயல்: வட தமிழகத்தில் மழை பெய்யும் appeared first on Dinakaran.

Related Stories: