இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தனர்


மீனம்பாக்கம்: ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, கடந்த மாதம் 29ம் தேதி, 17 மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அதிகாலையில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி 17 பேரையும் கைது செய்தனர். அவர்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளையும் பறிமுதல் செய்து, மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இதற்கிடையே பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம் எழுதி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு, இலங்கை நீதிமன்றம், 17 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். பாஸ்போர்ட் இல்லாததால் அவசரகால சான்றிதழ் வழங்கினர். பின்னர் விமான டிக்கெட்களுக்கும் ஏற்பாடு செய்து நேற்றிரவு கொழும்பிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 17 பேரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்து இருந்த வாகனங்கள் மூலம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.

The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: