பெரம்பலூர் அருகே விரட்டி கடித்த நாய்கள்: வீட்டுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளி மான்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் பகுதியில் உள்ள காட்டில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இந்நிலையில் இன்று காலை 7.30 மணி அளவில் இரை தேடி காட்டிலிருந்து ஊருக்குள் வந்த 3 வயது கொண்ட ஆண் புள்ளி மானை நாய்கள் கடித்து குதறின. இதனால் பயந்து போன மான், செட்டிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த ரவி (48) என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. நாய்களிடமிருந்து தப்பிய மான் கொம்பு உடைந்து ரத்தகாயங்களுடன் உயிருக்கு போராடியது.

இதையடுத்து ரவி மற்றும் பொதுமக்கள் மானை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனவர் ராமர், வனக்காப்பாளர் மணிகண்டன் ஆகியோர் மானை மீட்டு செட்டிகுளம் கால்நடை மருத்தகத்தில் சேர்த்தனர். உதவி மருத்துவர் குமரேசன் மானுக்கு சிகிச்சை அளித்தார். பின்னர் மான் வனத்தில் விடப்பட்டது.

The post பெரம்பலூர் அருகே விரட்டி கடித்த நாய்கள்: வீட்டுக்குள் புகுந்து உயிர் தப்பிய புள்ளி மான் appeared first on Dinakaran.

Related Stories: