அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை: பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்.31ம் தேதி வியாழக்கிழமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் மக்கள், புது துணிகள், நகைகள் என வாங்கி வருகின்றனர். தீபாவளிக்கு குறைந்த நாட்களே உள்ளதால் மக்கள் கூட்டம் கடைவீதிகளில் அலைமோதுகிறது. சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டு உள்ள பலரும் ரயில், பஸ் என அனைத்திலும் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.

இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழன்று வருகிறது. அதற்கு மறுநாள் வெள்ளி அனைவருக்கும் பணி நாளாகும். பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு அதற்கு மறுநாளே அலுவலகம் வர முடியாத நிலை உள்ளது. வியாழன்று பண்டிகை, மறுநாள் வெள்ளியன்று பணிநாள். நவம்பர் 2 மற்றும் நவம்பர் 3 தேதிகள் சனி, ஞாயிறு. இதில் பணிநாளான வெள்ளியன்று அரசு விடுமுறை அறிவித்தால் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறையாக கிடைக்கும். சொந்த ஊர்களில் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிவிட்டு, ஞாயிறன்று மீண்டும் ஊர் திரும்பலாம் என்று பலரும் எதிர்பார்த்து உள்ளனர். எனவே வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது; இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

The post அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை: பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: