பள்ளி மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற 2 வாலிபர்கள் கைது பள்ளிகொண்டா அருகே போலீஸ் அதிரடி ஆந்திராவில் இருந்து வாங்கி வந்தனர்

பள்ளிகொண்டா, அக்.19: பள்ளிகொண்டா அருகே பள்ளி மாணவர்களுக்கு ஆந்திராவில் இருந்து போதை ஊசிகளை வாங்கி வந்து விற்ற, 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை அடுத்துள்ள கோயில் அருகே பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால், அவர்களிடமிருந்த பிளாஸ்டிக் பைகளை சோதனை செய்தனர். அதில் போதை மாத்திரை அட்டைகள், சிரஞ்சுகள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவர்கள் பள்ளிகொண்டா தெக்காரோடு கீழாச்சூர் பகுதியை சேர்ந்த பிரதீப்ராஜ்(21), முருகேசனார் தெருவை சேர்ந்த விக்னேஷ்(21) என்பது தெரியவந்தது. மேலும், ஆந்திர மாநிலம், பலமநேர் பகுதியில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து, தண்ணீரில் கரைத்து பள்ளி மாணவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், அவர்களிடமிருந்து 30 போதை மாத்திரைகள், 10 சிரஞ்சுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து பிரீதீப்ராஜ், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு போதை ஊசி விற்ற 2 வாலிபர்கள் கைது பள்ளிகொண்டா அருகே போலீஸ் அதிரடி ஆந்திராவில் இருந்து வாங்கி வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: