தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசு வழங்கியது போன்று, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசு அலுவலர்கள், ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை மக்கள் நலன் கருதி சிறப்புற நடைமுறைப்படுத்துவதில் பெரும் பங்காற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு கருத்தில் கொண்டு, அவர்களது நலன் காக்கும் வகையில் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு 1.7.2024 முதல் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 53 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனை பரிசீலித்து 1.7.2024 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார். இதனால் 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்து 1.7.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.1,931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் அமிர்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக தலைவர் கு.தியாகராஜன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ், தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் அருள்சங்கு, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய நான்காம் பிரிவு சம்மேளன தலைவர் கே.கணேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுச்செயலாளர் இரா.அருள்ராஜ், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி.,எஸ்டி பணியாளர் நல சங்க பொதுச்செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் டி.மணிமொழி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

* ரூ.540 முதல் ரூ.7,500 வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும்
தமிழ்நாடு அரசு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி உள்ளதால், அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.540 முதல் அதிகபட்சமாக ரூ.7,500 வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியருக்கு சுமார் 540 ரூபாய் கூடுதலாக கிடைக்கும். இதேபோல் ரூ.30,000 அடிப்படை சம்பளம் கொண்ட அரசு ஊழியருக்கு கூடுதலாக 900 ரூபாய் கிடைக்கும் என்றும், ரூ.90,000 அடிப்படை சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.2,700 வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்றும், ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,500 வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

The post தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: