கனமழை காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது..!!

நீலகிரி: கனமழை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. தமிழகத்தின் முக்கிய மலை சுற்றுலா தலமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இங்குள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி போன்ற இடங்கள் பிரபல சுற்றுலா தலங்களாக உள்ளன. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை காலங்களில் கூட்டம் அலைமோதும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படும் மலை ரயில் சேவை மிகவும் புகழ்பெற்றது. இந்த பயணத்தில் அழகிய இயற்கை காட்சிகள் நம் கண்களுக்கும் விருந்தளிக்கும். ஊட்டி மலை ரயில் உலகப் புகழ் பெற்ற பாரம்பரியத்தை கொண்டுள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்ய உள்ளூர் முதல் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே, மலை பகுதிகளில் கனமழை பெய்தது.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி ரயில்வே நிர்வாகம் கடந்த 16, 17 ஆகிய இரண்டு தேதிகளில், மலை ரயிலை ரத்து செய்திருந்தது. மழை நின்றதை அடுத்து, இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை துவங்கியது. காலை, 7:10 மணிக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது. இதில்,150 சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.

The post கனமழை காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: