பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

 

கோவை, அக்.18: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சரவணக்குமார் (42). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான ஜெயக்குமார் (43) என்பவர் கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பிய சரவணக்குமார் தான் வைத்திருந்த ரூ.4 கோடி பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயக்குமார் கூறியப்படி வட்டி எதுவும் சரவணக்குமாருக்கு தரவில்லை என கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சரவணக்குமார் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரவேண்டும் என ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து ஜெயக்குமார் ரூ.2.5 கோடி பணத்தை சரவணக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் மீதம் இருந்த ரூ.1.5 கோடி பணத்தை திருப்பி தராமல் ஜெயக்குமார் காலம் தாழ்த்தி வந்தார். சரவணக்குமார் இது குறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் போது ஜெயக்குமார் ரூ.1.5 கோடி பணத்தை சரவணக்குமாரிடம் திருப்பி கொடுத்ததாக ஒரு ஆவணத்தை போலீசாரிடம் கொடுத்துள்ளார். அந்த ஆவணத்தை போலீசார் விசாரணை செய்தனர். அப்போது ஜெயக்குமார் அளித்த ஆவணம் போலியானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான ஜெயக்குமாரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெயக்குமாரை நேற்று கைதானார்.

The post பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: