சென்னை தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு விழா சசிகலா, ஓபிஎஸ் உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்

* பத்திரிகையாளர்களிடம் கறாராக பேசிய எடப்பாடி

சென்னை: அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை கொண்டாடிய பிறகு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். அதுபற்றி இனி எந்த செய்தியும் போடாதீர்கள் என்று கோபமாக கூறினார்.

அதிமுக 53வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை கொண்டாடும் வகையில் நேற்று காலை 11 மணியளவில் சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து, அங்கு கூடி இருந்த தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். கட்சி, அலுவலகத்தில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சென்னை, கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் கனமழை பெய்யும்போது தண்ணீர் தேங்குவதை தடுக்க, திருப்புகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.

வெள்ள நீர் வடிவதற்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. அரசுக்கு இந்த கமிட்டி என்ன பரிந்துரை செய்துள்ளது என்ற விவரம் மற்றும் வெள்ளை அறிக்கை கேட்டேன். ஆனால் நேற்று முன்தினம் துணை முதல்வர், சென்னையில் தண்ணீர் வடிந்துள்ளது, இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். மழை இல்லாததால் வெள்ளம் இல்லை. தண்ணீர் தேங்கவில்லை, அதுதான் நிலைமை.

அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் இன்று எவ்வளவோ அவதாரம் எடுக்கிறார்கள். என்னுடன் இருக்கும் 6 பேர் (எஸ்.பி.வேலுமணி உள்பட) என்னிடம் வந்து அதிமுகவை இணைக்க வேண்டும் என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி போடுகிறீர்கள். விவாத மேடை நடத்துகிறீர்கள். அத்தனையும் பச்சைப் பொய். திருப்பி திருப்பிச் சொல்லியாச்சி, தயவு செய்து விட்டு விடுங்கள். எங்கள் (எடப்பாடி) தரப்பில் இருப்பதுதான் அதிமுக.

இன்றைக்கு அதிமுகவுக்கு கட்சி விரோதமாக செயல்பட்டவர்கள் (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) அகற்றப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள். அதனால் ஒன்னா போச்சு, இரண்டாக போச்சு என்ற கேள்வியை தயவுசெய்து ஊடகங்கள் விட்டு விடுங்கள். நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான். இவ்வாறு எடப்பாடி ஆவேசமாக கூறினார். இந்நிகழ்ச்சிகளில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post சென்னை தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு விழா சசிகலா, ஓபிஎஸ் உள்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான் appeared first on Dinakaran.

Related Stories: