சேலத்தில் தொடர் மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

சேலம்: சேலத்தில், சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சிவதாபுரம் ஊருக்குள் புகுந்தது. ரயில்வே பாலத்தில் 10 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் சித்தர்கோயிலுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 5ம் தேதி இரவு சேலத்தில் 11 செ.மீ மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, சூரமங்கலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி ஏரியின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால், ஏரி நிரம்பி அந்த தண்ணீர் சிவதாபுரம் ஊருக்குள் நேற்று அதிகாலை புகுந்தது. 5 தெருக்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இதனால் மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிக்கு ஆளாகினர். சிவதாபுரம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு ரயில்வே பாலத்தின் கீழ் 10 அடிக்கு தண்ணீர் தேங்கியது. அவ்வழியாக சென்ற கார், சரக்கு வாகனம் மற்றும் அங்குள்ள டாஸ்மாக் குடோன் தண்ணீரில் முழ்கியது. சிவதாபுரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால், சித்தர் கோயில் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

சிவதாபுரத்தில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.

இந்த பணியை விரைந்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிவதாபுரம் ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீர் மோட்டார் வைத்து அகற்றப்பட்டு வருகிறது. சிவதாபுரத்தில் தேங்கியுள்ள தண்ணீர் செஞ்சிகோட்டை வழியாக திருமணி முத்தாறு செல்லும். தண்ணீரை வெளியேற்றும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றனர்.

The post சேலத்தில் தொடர் மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது appeared first on Dinakaran.

Related Stories: