×

சித்தூர் தெலுங்கு வீதியில் பெருமாள் சுவாமி கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜைக்கு ஏற்பாடு

 

பாலக்காடு, அக். 11: பாலக்காடு மாவட்டம் சித்தூர் தெலுங்கு வீதியில் அமைந்துள்ள பெருமாள் சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசியில் கடைசி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (12ம் தேதி) சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு நடந்து வருகிறது. இந்தாண்டும் கடந்த ஆவணி கடைசி சனிக்கிழமை முதல் புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜை நடந்தது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு நாளை காலை 6 மணிக்கு அபிஷேக பூஜைகள், அலங்கார பூஜைகள் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, தேவாங்கபுரம் பாறை விநாயகர் கோயிலில் இருந்து நாதஸ்வரத்துடன் மகளிர், சிறுவர்-சிறுமியர்கள் தாம்பூலத்தட்டுகள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கின்றது. சுவாமி திருக்கல்யாண வைபவம் துரைசாமி ஐயர் தலைமையில் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அமர்ந்து நாதஸ்வர மேளத்துடன் கடைவீதி, அன்னம்ப்பிள்ளி, தெலுங்குவீதி வழியாக ஊர்வலம் வந்து படி விளையாட்டு பூஜைகள் நடக்கின்றன. இதனையடுத்து மதியம் ஒரு மணிக்கு உச்சிக்கால பூஜைகள் வெகு சிறப்பாக நடக்கிறது. தொடர்ந்து நெல்லியங்காடு மாரியம்மன் கோயில் திடலில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு விஷேச பூஜைகள், நவராத்திரி விஷேச பூஜைகள் நடைபெறுகிறது. இந்நிலையில் புரட்டாசி சனிக்கிழமை கடைசி வார பூஜைக்கு திரளாக பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவர். இதைத்தொடர்ந்து, விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post சித்தூர் தெலுங்கு வீதியில் பெருமாள் சுவாமி கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமை பூஜைக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Perumal Swami Temple ,Chittoor Telugu Road ,Palakkad ,Purtasi ,Palakkad district ,Chittoor Telugu Street ,
× RELATED மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில்...