வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சேதமடைந்த மற்றும் தாழ்வான மின்பெட்டிகள் மாற்றியமைப்பு

சென்னை, அக்.11: வடகிழக்கு பருவமழையை ஒட்டி மின்வாரிய பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மின் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகளின் போது சேதமடைந்த மின் பெட்டிகளை உயர்த்தி, மின் கம்பிகளை உறுதிப்படுத்துவது, நிலத்தடி மின் தடங்களை பதிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தற்போது வடக்கு மண்டலத்தில் பெரம்பூர் மற்றும் திருவொற்றியூரில் பணிகள் நடந்து வருகின்றன. ஆயுதபூஜை விடுமுறைக்கு பின், ராயபுரம் மற்றும் ஆர்.கே.நகரில் தூண் உயரும் பணி மேற்கொள்ளப்படும். வெள்ள அபாயத்தை கருத்தில் கொண்டு, வடசென்னையில் 1,804 அதிக ஆபத்துள்ள மின் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டமைப்புகள் உயர்த்தப்படுகின்றன.
மேற்கு மண்டலத்தில், அரும்பாக்கம் தூண் உயர்த்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது, 90 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. தென்சென்னையில் கிண்டி பகுதிகளில் 108 தூண்கள் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணி அடுத்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில், கொட்டிவாக்கம் மின் பெட்டிகள் உயர்த்தும் பணிகள் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிகால் பணிகளின் போது சேதமடைந்த நிலத்தடி மின் வடங்கள் மீண்டும் அமைக்க மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். சில இடங்களில் மின்பகிர்மான கழகத்தின் ஒப்பந்ததாரர்களுக்கும் பணி ஒதுக்கப்பட்ட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக சேதமடைந்த மற்றும் தாழ்வான மின்பெட்டிகள் மாற்றியமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: