×

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்:தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த அறிவியலாளர் ஆல்பிரட் நோபல் நோபல் பரிசை நிறுவினார். அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் கடந்த 1901ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றன. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7ம் தேதி முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

நேற்றைய தினம் 2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. அந்த வரிசையில், தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் துயரங்களை எதிர்கொள்ளும் வகையில் கவிதைகளை இயற்றிய ஹான் காங்குக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஹான் காங் அவர்களின் இலக்கியங்கள் ஆணாதிக்கம், வன்முறை, துக்கம் மற்றும் மனிதநேயம் ஆகிய கருப்பொருள்களை உள்ளடக்கியதாக இருக்கும். அவரது நாவலான தி வெஜிடேரியன் 2015ல் டெபோரா ஸ்மித்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் 2016ல் சர்வதேச புக்கர் பரிசை வென்றது. இதனிடையே தங்க பதக்கத்துடன் கூடிய ரூ.8.39 கோடி பரிசு தொகையை உள்ளடக்கிய நோபல் விருதுகள் விருதை நிறுவிய ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

The post தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Han Kong ,STOCKHOLM ,Alfred Nobel ,Sweden ,
× RELATED தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு...