தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

சென்னை: லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது எனவும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று (10-10-2024) முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு கூறியதாவது;

“நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 14ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

வங்கக் கடலில் 12ம் தேதி மேலும் ஒரு கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. 12ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 13,14ம் தேதிகளில் மழை பெய்யும். உ.பி., ம.பி., குஜராத்தின் சில பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை அடுத்த சில நாட்களில் விலகுகிறது” என தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் appeared first on Dinakaran.

Related Stories: