பத்திர ஆவணங்களை கொடுக்க லஞ்சம் 2 சார்பதிவாளர்கள் கைது ரூ.13 லட்சம் பறிமுதல்

சென்னை: கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், தான் பதிவு செய்த நிலத்தின் ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின், ரூ.35 ஆயிரம் கொடுத்தால் தருவதாக கூறியுள்ளார். அந்தப் பணத்தை நீங்கள், சிங்காநல்லூர் பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள பூபதிராஜாவிடம் கொடுக்கும்படியும் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பசாமி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அபய்குமார் சிங், ஐஜி துரைக்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின்பேரில், கருப்பசாமி, ரசாயனம் தடவிய ரூ. 35 ஆயிரம் பணத்தை நேற்று மாலையில் எடுத்துக் கொண்டு பதிவுத்துறை உதவியாளர் பூபதிராஜாவிடம் பணத்தைக் கொடுத்தார்.

அதை வாங்கிக் கொண்டபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபதி ராஜாவை கையும் களவுமாக பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பூபதி ராஜா மற்றும் நான்சி நித்யா கரோலின் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் நான்சியின் காரை சோதனையிட்டபோது அதில் ரூ. 13 லட்சம் ரொக்கப் பணம் இருந்ததை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில், 15 நாட்களுக்கு முன்னர் சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்தனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், நான்சி மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் மாற்றப்படவில்லை. மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதால், தினமும் வரும் லஞ்சப் பணத்தை நான்சி வாங்காமல், பத்திர எழுத்தர்களிடம் வாங்கி வைக்கும்படி கூறியுள்ளார். நேற்று இதுவரை ரூ.13 லட்சம் வசூலாகியிருப்பது தெரிந்ததால், அதை தனது காரில் வைக்கும்படி பத்திர எழுத்தர்களிடம் கூறியுள்ளார்.

அவர் காரில் பணத்தை வைத்திருப்பது தெரியவந்தது. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் நான்ச நித்யா கரோலின் மற்றும் உதவியாளர் பூபதி ராஜா ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இன்று காலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post பத்திர ஆவணங்களை கொடுக்க லஞ்சம் 2 சார்பதிவாளர்கள் கைது ரூ.13 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: