ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்றுமுன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.600க்கும், ஐஸ் மல்லி ரூ.500க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.350க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், சாமந்தி ரூ.160க்கும், சம்பங்கி ரூ.180க்கும் பன்னீர் ரோஸ் ரூ.120க்கும் சாக்லேட் ரோஸ் ரூ.240க்கும் அரளி பூ ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் நேற்று முன்தினத்தை விட மீண்டும் நேற்று சற்று விலை உயர்ந்துள்ளது.

இதில் ஒரு கிலோ மல்லி ரூ.900க்கும், ஐஸ் மல்லி ரூ.700க்கும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.450க்கும், கனகாம்பரம் ரூ.1000க்கும், சாமந்தி ரூ.240க்கும், சம்பங்கி ரூ.250க்கும், பன்னீர் ரோஸ் ரூ.160க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.400க்கும், அரளி பூ ரூ.420க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வர உள்ள நிலையில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று மீண்டும் பூக்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

The post ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: