ஜம்மு-காஷ்மீர் முதல்வர் தேர்வுக்காக நாளை தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம்: உமர் அப்துல்லா பேட்டி

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் தேர்வுக்காக நாளை தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக உமர் அப்துல்லா தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும், மா.கம்யூ 1 இடத்திலும் மொத்தம் 49 இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 90 இடங்களில் 49 இடங்களை ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி பெற்றதால், அந்த கூட்டணியே ஆட்சியமைக்க உள்ளது. எதிர்கட்சியின் வரிசையில் உள்ள பாஜக 29 இடங்களிலும், இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் மீதமுள்ள இடங்களை கைப்பற்றி உள்ளன.

இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவரும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவுமான உமர் அப்துல்லா இன்று அளித்த பேட்டியில், ‘நாளை எங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. எங்களது கூட்டத்திற்குப் பிறகு, கூட்டணிக் கட்சியின் கூட்டம் நடக்கும். அப்போது தான் கூட்டணியின் சட்டமன்ற தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதன்பின் கூட்டணியின் தலைவர், தனது ஆதரவுக் கடிதங்களுடன் துணை நிலை ஆளுநரை சந்திப்பதற்காக ராஜ்பவனுக்கு செல்வார். தொடர்ந்து முதல்வர் பதவியேற்பதற்கான தேதியை துணை நிலை ஆளுநர் தீர்மானிப்பார். கடந்த 2018ம் ஆண்டு முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. தற்போது புதியதாக தேர்ந்ெதடுக்கப்பட்ட அரசு உருவாகி உள்ளதால், நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது’ என்றார்.

மீண்டும் அரியானா முதல்வராக நயாப் சிங் சைனி 12ம் தேதி பதவியேற்பு: அரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. முதல்வராக நயாப் சிங் சைனி மீண்டும் வரும் 12ம் தேதி பதவியேற்க உள்ளதாக தெரிகிறது. அரியானா மாநில தலைவர் மோகன்லால் படோலியுடன் டெல்லி வந்துள்ள நயாப் சிங் சைனி, பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார். அதன்பின் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே பதவியில் இருந்த 9 அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் தேர்தலில் தோற்றதால், புதிய அமைச்சர்கள் தேர்வு, பதவியேற்பு விழா அழைப்பிதழ் போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜம்மு-காஷ்மீர் முதல்வர் தேர்வுக்காக நாளை தேசிய மாநாட்டு கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம்: உமர் அப்துல்லா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: