×

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு பெற்றதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. வழித்தடம் 3-இல், சேத்பட் முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் செப்டம்பர் 2023-இல் சிறுவாணி மற்றும் பாலாறு என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 708 மீட்டர் ஆகும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி ஆகஸ்ட் 2024-இல் (downline) ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது. இதற்கிடையில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு 2024 ஜனவரியில் (upline) சேத்பட் நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று 09.10.2024 ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்பட் மாநகராட்சி பள்ளி, சேத்பட் தோபி காட், கருகாத்தம்மன் கோயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.

இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனர், இது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது. இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. மேலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாட்கள் ஆனது, இது சென்னை மெட்ரோ இரயிலின் கட்டம்-2 பணிகளின் தற்போதைய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. இந்நிகழ்வை, சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, இ.ஆ.ப., சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கோனேரு பவானி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

The post மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nungambakkam Sterling Road ,Route 3 ,Chennai ,Chennai Metro Rail Administration ,Chennai Metro Railway Company ,Metro Administration ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில்...