சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை: ஹெச்.ராஜா

திருவாரூர்: சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள ஒரு திடலில் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளரான இளையராஜா அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தீட்சிதர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த தீட்சிதர்கள், வீடியோவை அழிக்காவிட்டால் செல்போனை உடைத்து விடுவோம் என்று கூறி, இளையராஜாவின் கையை பிடித்து முறுக்கி தாக்கி செல்போனை பிடுங்கி எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இளையராஜா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தன்னை தாக்கிய தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து விசிக பிரமுகரை தாக்கியதாக 5 தீட்சிதர்கள் மீது நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்களுக்கு பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் கலந்து கொண்டவர் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; உடற்பயிற்சி எல்லோருக்கும் வேண்டும். சிதம்பரம் கோவில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை. கருவறையில் விளையாடவில்லை, கோயில் வளாகத்தில் தான் விளையாடினார்கள் என கூறியுள்ளார்.

The post சிதம்பரம் கோயில் வளாகத்தில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறு இல்லை: ஹெச்.ராஜா appeared first on Dinakaran.

Related Stories: