குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் ‘ஆண் கொம்பன்’ யானை: பொதுமக்கள் அச்சம்

ஊட்டி: குன்னூர் அருகே அளக்கரை கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் ஒற்றை ‘ஆண் கொம்பன்’ யானை உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அளக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி தேயிலை தோட்டங்கள் அதிகளவு உள்ளன. இந்த தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புக்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியும் உள்ளது. இந்த குதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சமீபகாலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்கு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் உள்ளதால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தேயிலை தோட்டங்களுக்கு பணிகளுக்கு செல்லவும், இரவு நேரங்களில் வெளி பகுதிகளில் நடமாட முடியாமலும் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், சமவெளி பகுதிகளிலிருந்து ஒற்றை ஆண் கொம்பன் யானை ஒன்று பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகிறது. வனத்துறை சார்பில், இருமுறை விரட்டியடித்தும் மீண்டும் கிராமப்பகுதிக்கு வந்து செல்வதால், மக்கள் வீட்டைவிட்டு இரவு நேரங்களில் வெளியே வர முடியாமல் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, மனித-விலங்குகள் மோதல் ஏற்படும் முன்பு அளக்கரை கிராமத்தில் முகாமிட்டிருக்கும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் உலா வரும் ‘ஆண் கொம்பன்’ யானை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: