தாமதமாகும் பருவமழை திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது

களக்காடு, அக்.9: பருவமழை தாமதமாகி வருவதால், திருக்குறுங்குடி பெரிய குளம் வறண்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் கடும் வெப்பம் நிலவுகிறது. வடகிழக்கு பருவமழையும் சரிவர பெய்யாமல் காலதாமதமாகி வருகிறது. இதனால் திருக்குறுங்குடி பெரியகுளம் தண்ணீர் இன்றி வறண்டுள்ளது. பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. திருக்குறுங்குடி பெரியகுளம் இப்பகுதியின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. இக்குளத்தின் மூலம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் கால்வாய் மூலம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையினால் குளம் நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது. அதன் பின் ஜூன் மாதமும் குளம் நிரம்பியது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெரியகுளம் நீரின்றி வறண்டுள்ளது. ஆங்காங்கே பள்ளங்களில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் தேங்கி உள்ளது. குளம் வறண்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அக்டோபர் மாதம் 3வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே குளத்திற்கு. தண்ணீர் வரத்து ஏற்படும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

The post தாமதமாகும் பருவமழை திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டது appeared first on Dinakaran.

Related Stories: