×

காதலிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து இளைஞர்களை ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் சிக்கினார்: மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது; ஜூசில் போதை மருந்து கலந்தது அம்பலம்

திருமலை: விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை காதலிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்த இளம்பெண், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் ஜூசில் போதை மருந்து கலந்து கொடுத்தது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஷீலாநகரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அமெரிக்காவில் சில காலமாக தங்கி உள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞருக்கு, முரளிநகரை சேர்ந்த 28 வயது இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்தார்.

அமெரிக்காவில் இருந்து இளைஞரின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, ஷீலாநகரில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்று இளம்பெண் நெருங்கி பழகினார். பின்னர் அவர்களது மகனை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டதற்கு வாலிபரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. பின்னர் அமெரிக்காவில் உள்ள அந்த இளைஞரை 2 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் விசாகப்பட்டினத்துக்கு வரவழைத்தார். அப்போது விமான நிலையம் சென்ற இளம்பெண், இளைஞரை முரளிநகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர் அந்த இளைஞரின் ஆடைகளை களைத்துள்ளார். தொடர்ந்து நிர்வாணமாக இருந்த இளைஞருடன் இளம்பெண் ஆபாசமாக படங்களை எடுத்துக்கொண்டார். பின்னர் ஆபாச படங்களை காட்டி திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கடந்த மாதம் பீமிலியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நிச்சயத்தார்த்தம் செய்து அந்த இளைஞரை ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வைத்துள்ளார். தொடர்ந்து அந்த இளைஞரை அவளது வீட்டில் அடைத்து வைத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் இந்த புகைப்படங்களை வைத்து போலீசில் வழக்கு பதிவு செய்ய வைப்பேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த இளைஞர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த வீட்டில் இருந்து தப்பிக்க முயன்றபோது ​தனது நண்பர்களுடன் சேர்ந்து இளம்பெண் கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். அவரது நண்பர்களும் இளைஞரை மிரட்டி உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ம் தேதி பாதிக்கப்பட்ட இளைஞர் தப்பிச் சென்று பீமிலி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து லேப்டாப், டேப், 3 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் இளம்பெண்ணும், அவரது நண்பர்களும் பணக்கார இளைஞர்களை குறிவைத்து காதல் என்ற பெயரில் சிக்க வைத்து ஜூசில் போதை மருந்து கலந்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரது நண்பர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மேலும் ஒரு இளைஞர் இதேபோன்று இளம்பெண் காதல் வலையில் சிக்கி பணத்தை இழந்ததாக தற்போது புகார் அளித்துள்ளார்.

The post காதலிப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்து இளைஞர்களை ஆபாச வீடியோ எடுத்த இளம்பெண் சிக்கினார்: மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது; ஜூசில் போதை மருந்து கலந்தது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam ,AP State Visakhapatnam District ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்...