பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து தாய், மகன் உடல் நசுங்கி பலி: போலீசார் விசாரணை

சென்னை: ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்றபோது பைக் மீது அரசு பேருந்து மோதியதில் தாய், மகன் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெய (32). இவர், மகிந்திரா சிட்டியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தம்பதியின் மகன் ஆலன் (15), அஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று ஜெய தனது மகன் ஆலனுடன், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தை ஆலன் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரகடம் சாலை சந்திப்பில் இவர்கள் சாலையை கடக்க முயன்றுள்ளனர்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கி சென்ற அரசு பேருந்து இவர்கள் மீது மோதியது. இதில் ஜெய, ஆலன் ஆகிய இருவரும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். அப்போது பணியில் இருந்த மறைமலைநகர் போக்குவரத்து போலீசார், இருவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை சேகரித்து பேருந்தை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

The post பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து தாய், மகன் உடல் நசுங்கி பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: